கார்த்தி நடித்து வரும் 'சர்தார்' திரைப்படம் அசர்பைசான் நாட்டின் நாடாளுமன்றத்தில் அதிக பொருட்செலவுடன் படமாக்கப்பட்டுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
'சுல்தான்' திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படம் 'சர்தார்'. 'இரும்புத் திரை' 'ஹீரோ' உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தி நரைத்த தாடியுடன் வயதான தோற்றத்திலும், காவல் அதிகாரியாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
கார்த்தி நடிக்கும் படங்களிலேயே அதிக பட்ஜெட்டுடன் உருவாகிவரும் இப்படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்றது. இதில் வில்லனாக நடிக்கும் இந்தி நடிகர் சங்கி பாண்டே சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளுக்காக மட்டுமே அசர்பைசான் சென்று படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.
» இளையராஜாவுடன் இணையும் வெங்கட் பிரபு
» ‘வாடிவாசல்’ முடிந்த பின்பு விஜய்யிடம் கதை சொல்கிறார் வெற்றிமாறன்?
இதுவரை ஷூட்டிங் எடுக்கப்படாத அசர்பைசான் நாடாளுமன்றத்திலேயே ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நடைபெறுவது போலவும், அதில் வில்லன் சங்கி பாண்டே இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
அசர்பைசான் நாட்டைத் தொடர்ந்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூபாய் 4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.