சுசீந்திரன் - விஜய் ஆண்டனியின் 'வள்ளி மயில்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

சுசீந்திரன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் 'வள்ளி மயில்' படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட படிப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது.

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'வள்ளி மயில்'. 1980 -களில் புகழ் பெற்ற 'வள்ளி திருமணம்' நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக 'வள்ளி மயில்' திரைப்படம் உருவாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1980 காலக்கட்ட பின்னணியை தத்ருபமாக காட்சிப்படுத்தும் வகையில் , ரூ.1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக, பழமையான சென்னையை கட்டமைக்கும், பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையை தொடர்ந்து டெல்லியில் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE