ஜூன் 9-ல் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வழங்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்

By செய்திப்பிரிவு

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளனர் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ''தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்'' எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி, இப்போது திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர் மணமக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும். இந்த சந்திப்பின் போது நயன்தாரா உடன் இரண்டு படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

முன்னதாக, முதலில் திருப்பதியில் திருமணம் நடத்த இருவரும் திட்டமிட்ட நிலையில், அங்கு 150 விருந்தினர்கள் வரை திருமணத்தில் கலந்துகொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனாலே இப்போது திருமணத்தை மகாபலிபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் அதே ஜூன் 9-ம் தேதி விமரிசையாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கவுள்ளது. திருமண நிகழ்வை தனியார் ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வெளியிட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE