“நான்தான் முதலில் பஹத் பாசிலிடம் காதலைச் சொன்னேன்” - 2014 நினைவுகளைப் பகிர்ந்த நஸ்ரியா

By செய்திப்பிரிவு

2014-ம் ஆண்டு 'பெங்களூர் டேஸ்' படப்பிடிப்பின் போதுதான், தனக்கும் பஹத் பாசிலுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

நானி - நஸ்ரியா நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கியிருக்கும் படம் 'அன்டே சந்தரானிக்கி'. தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் 'அடடே சுந்தரா' என்ற பெயரில் தமிழிலும் வெளியிடப்பட உள்ளது.

இந்த மாதம் ஜூன் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நேரடியாக இந்த திரைப்படம் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள அழகம் பெருமாள், ரோகினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய நஸ்ரியா "தமிழ்நாட்டில் இருந்து எனக்குக் கிடைத்த வரவேற்பு நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது. மீண்டும் 'அடடே சுந்தரா' படம் மூலம் திரும்ப வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஜாலியான அனுபவத்தைக் கொடுக்கும்'' என்றார்.

தொடர்ந்து தனது காதல் குறித்து பேசிய நஸ்ரியா, '' 'பெங்களூரு டேய்ஸ்' திரைப்படத்தின் போதுதான் பஹத்துக்கும் எனக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2014-ல் வெளியான இந்த படத்தில்தான் நாங்கள் இருவரும் சேர்ந்து முதன் முறையாக பணியாற்றினோம்.

எங்கள் காதலுக்கு பெற்றோர் தரப்பிலும் சம்மதம் இருந்தது. அவர்களும் மிக மகிழ்ச்சியாக திருமணத்தை நடத்தி வைத்தனர். நான்தான் முதலில் அவரிடம் காதலை சொன்னேன் என்று நினைக்கிறேன். அவரை வாழ்நாள் முழுவதும் நான் பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று அவரிடம் நான் சொன்னது. அவருக்கு பிடித்திருந்தது. இப்படி எந்த பெண்ணும் என்னிடம் இதற்கு முன்பு சொன்னது இல்லை என்று சொன்னார்.

அதுபோலவே நான் திருமணம் முடிந்ததும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தேன். அதற்கு பிறகு நான் மீண்டும் நடிக்க வேண்டும் என பகத் ஆசைப்பட்டார். நான் எப்போதும் போல மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். இருவரும் வேலை தொடர்பாகவும் நிறைய பகிர்ந்து கொள்வோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE