அக்‌ஷய் குமாரின் 'சாம்ராட் பிருத்விராஜ்' படத்துக்கு  3 மாநிலங்களில் வரி விலக்கு

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சாம்ராட் பிரித்விராஜ் படத்திற்கு 3 மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் 'சாம்ராட் பிருத்விராஜ்'. சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். 2017-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் அவரது மனைவியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உட்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 'சாம்ராட் பிருத்விராஜ்' படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை (ஜூன் 3) வெளியாகிறது. இந்நிலையில், இந்த படம் ஓமன் மற்றும் குவைத்தில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம், இந்தியாவின் மூன்று மாநிலங்களில் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டது போலவே, இந்தப் படத்துக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

முதலில் உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்கள் வரிவிலக்கு அறிவித்த நிலையில், நேற்று இந்தப் படத்தை உத்தரபிரதேச முதல் யோகி ஆதித்யநாத் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவுடன் அமர்ந்து பார்த்தார். பின்னர் படத்தை பாராட்டிய அவர், அப்போதே வரிவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE