கேஜிஎஃப் களத்தை மையமாக வைத்து ஒரு படைப்பு - பா.ரஞ்சித் புதிய திட்டம்

By செய்திப்பிரிவு

நடிகர் விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் கதை கோலார் தங்க வயலை (கேஜிஎஃப்) மையமாக வைத்து உருவாக்கப்படும் என கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

'சார்பட்டா பரம்பரை' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. காளிதாஸ் ஜெயராமன், கலையரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து, 'சீயான்61', 'வேட்டுவம்' 'பிர்சா முண்டா' உள்ளிட்ட படங்களுடன் கமலுடனும் கைகோக்க உள்ளார் ரஞ்சித். இந்த 4 நான்கு படங்களும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படம் கோலார் தங்க வயலை (கேஜிஎஃப்) மையமாக கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 19-ஆம் நூற்றாண்டில் முதல்முறையாக கேஜிஎஃப்-ல் தங்கத்தை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழிலாளர்களைப் பற்றிய கதையாக இது இருக்கும் எனவும், பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் படங்கள் வெளியாகும் வரை காத்திருக்க விரும்புவதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்தப் படம், பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத விக்ரம்61 படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷஷன் மற்றும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

'சீயான் 61' படத்திற்கு பிறகு 'வேட்டுவம்' அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. 'வேட்டுவம்' மற்றும் கமல் நடிக்கும் படங்கள் கிராமப்புறத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE