'என்ன மாதிரியான எமோஷன்' - 'டான்' படம் குறித்து பாராட்டிய நடிகர் ரஜினி

By செய்திப்பிரிவு

டான் படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான படங்கள் வைரலாகி வருகின்றன.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 'டான்'. இந்தப் படம் வர்த்தக ரீதியில் வெற்றிபெற்று இன்னும் திரையில் ஓடிவருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டது.

இந்த மகிழ்ச்சியில் படக்குழு இருந்துவரும் வேளையில், அவர்களின் சந்தோஷத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மற்றுமொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனான டான் படக்குழு சந்திப்பு. 'டான்' படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிபியை அழைத்து பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் சிபி, "ஒரு மகத்தான நாள். சூப்பர்ஸ்டார் ரஜினி சாரை சந்தித்ததுடன், அவருடன் ஒரு மணிநேரம் டான் படம் தொடர்பாக பேசினோம். 'என்ன மாதிரியான படம், என்ன மாதிரியான எமோஷன்' என அவர் படம் குறித்து பேசிய தருணத்தில் நாங்கள் வானத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வை அனுபவித்தோம். லவ் யூ தலைவா" என உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் தனது பதிவில், "இந்திய சினிமாவின் டான் ரஜினி சாரை சந்தித்து அவரின் ஆசிர்வாதத்தை பெற்றேன். அவரை சந்தித்த அந்த 60 நிமிடம் காலத்துக்குமான நினைவு. நன்றி தலைவா, உங்களின் பாராட்டுக்கு" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE