“என்னால் நம்ப முடியவில்லை” - 20 ஆண்டு கால திரைப் பயணம் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

"திரைத் துறையில் கால்பதித்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் திரைத் துறையில் கால்பதித்து இன்றுடன் 20 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில், இரண்டு தசாப்தங்கள் கடந்த தன்னுடைய திரையுலக பயணத்தையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''அனைவருக்கும் வணக்கம்... திரையுலகில் என் பயணம் தொடங்கி 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. காலம் வேகமாக ஓடுகிறது. நான் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடிக்கத் தொடங்கும்போது இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை, கடவுள் கருணை காட்டியுள்ளார்.

என்னுடைய ரசிகர்களின் அளவுகடந்த அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் மட்டும் ஈடு செய்துவிட முடியாது. நீங்கள்தான் என் பலம், ஐ லவ் யூ ஆல்... என் மீது அன்பு செலுத்தும் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகள். எனக்கு ஆதரவளித்து வரும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். என்னுடைய அண்ணன் - குரு செல்வராகவன், எனக்குள் இருக்கும் நடிகனை வெளியில் கொண்டுவந்த என் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றிகள்.

இறுதியாக என் தாய்க்கு நன்றி... அவருடைய அன்றாட பிரார்த்தனைகள் தான் என்னை பாதுகாத்து இவ்வளவு தூரம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. என் அம்மா இல்லாமல் நான் ஒன்றுமில்லை. இந்த ஒரு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம். எண்ணம் போல் வாழ்க்கை அன்பை பரப்புங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE