சிங்கப்பூரில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு தடை?!

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. சிங்கப்பூரின் திரைப்படங்களுக்கான வழிகாட்டுதலை இந்த திரைப்படம் மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம். 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இந்தியாவின் சில மாநிலங்களில் இந்தத் திரைப்படத்திற்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டது. நல்ல வசூலை ஈட்டி இருந்தது இந்தத் திரைப்படம். இதுவரை சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிகிறது. இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்தத் திரைப்படம் சிங்கப்பூரில் தடையை எதிர்கொள்ளும் சூழலில் உள்ளது. "இந்தத் திரைப்படத்தில் காஷ்மீர் பகுதியின் சூழலை வைத்து இஸ்லாமிய சமூகத்தினர் ஒருதலைபட்சமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். மறுபக்கம் இந்துக்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் சமூகத்தில் வெவ்வேறு தரப்பினரிடையே பகைமை ஏற்படலாம். சிங்கப்பூரில் இன ரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவுப்படுத்தும் எதற்கும் அனுமதி இல்லை" என அந்நாட்டின் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் ஐஎம்டிஏ தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE