ஜாமினை மறுத்த சனல் குமார் சசிதரன்

By ஆர்.ஜெயக்குமார்

நடிகை மஞ்சு வாரியார் புகாரின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட இயக்குநர் சனல் குமார் சசிதரனை எர்ணாகுளம் இளமக்கர காவல் நிலையைத்துக்குச் சென்று அழைத்துச் சென்று ஆய்வாளர் விசாரணை நடத்தினார். நேற்று திருவனந்தபுரத்துக்கு அருகில் பாறசாலயில் தன் சொந்தக்காரர்களுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மாற்று உடையில் வந்த இளமக்கர காவலர்களால் சனல் நாடகத்தனமான முறையில் கைதுசெய்யப்பட்டார்.

“இந்தக் கைது குறித்துத் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை. விசாரணைக்கு என்று அழைத்தால் நானே வந்து சரண் அடைந்திருப்பேன். வந்தவர்கள் அடியாட்களா, போலீசா எனத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு கொலை மிரட்டல் இருந்ததால் நான் மிகுந்த பயத்தில் இருந்தேன். நீங்கள் யார், அடையாள அட்டை காண்பியுங்கள், என்மீதான குற்றப்பத்திரிகையைக் காட்டுங்கள்? எனப் பல முறை கேட்டும் அவர்கள் ஒன்றும் பேசவில்லை. வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.” என இந்தக் கைது குறித்து சனல் தெரிவித்துள்ளார்.


இளமக்கர காவல் நிலைய ஜாமினில் வெளிவரும் வகையில்தான் வழக்குத் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சனல் காவல் நிலைய ஜாமினில் வெளிவர மறுத்துவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு கேட்டுக்கொண்டார். முன்னாள் வழக்கறிஞரான சனல் இது குறித்து “என் மீது இளமக்கர போலீஸ் வழக்கு எடுத்தது எந்த அடிபடையில் எனத் தெரியவில்லை. இந்த வழக்கு இவர்கள் எல்லைக்குள் வராது. மேலும் நான் மஞ்சு வாரியாரை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்னைக் கைதுசெய்துள்ளனர் எனத் தெரியவில்லை. இதையெல்லாம் நான் நீதிமன்றத்தில் முறையிடுவேன். நீதிமன்ற ஜாமினில்தான் வெளிவருவேன்” எனக் கூறினார். மேலும் அவர், மஞ்சு வாரியார் குறித்து தான் ஏற்கெனவே சமூக ஊடகத்தில் எழுதியதை உறுதிப்படுத்தினார். “அவர் உயிருக்கு இப்போதும் ஆபத்து இருக்கிறது” என்றார். இதனிடையே சனல் நாடகத்தனமாகக் கைதுசெய்யப்பட்டது குறித்து கேரளத்தில் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE