ஆச்சார்யா ரிலீஸ் | சோனு சூட்டுக்கு பால் அபிஷேகம் செய்து ஆரத்தி எடுத்த ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

நாக்பூர்: ஆச்சார்யா திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சோனு சூட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து, ஆரத்தி எடுத்து வழிபட்டுள்ளனர். அதனை சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஆச்சார்யா'. இந்த படத்தை கொரடலா சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சோனு சூட் 'பசவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெள்ளியன்று வெளியான இந்த திரைப்படம் இதுவரை 140 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சோனு சூட் ரசிகர்கள் அவரை தீவிரமாக வழிபட்டு அசத்தியுள்ளனர்.

கரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் எளிய மக்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை தானாக முன்வந்து செய்தவர் சோனு சூட். தொடர்ச்சியாக அப்படி அவர் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அவரது பணியை பலரும் பாராட்டினர். தெலங்கானா மாநிலத்தில் அவருக்கு கோவில் கட்டி, அவரது சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் ரசிகர்கள்.

இந்நிலையில், தற்போது அவர் நடித்த திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாகி உள்ளது. அதனை கொண்டாடும் விதமாக அவருக்கு விண்ணை முட்டும் உயரத்திற்கு பதாகை வைத்து, அதற்கு மாலை சூட்டி, திலகம் வைத்து, பூசணிக்காய் சுற்றி திஷ்டியும் கழித்துள்ளனர் ரசிகர்கள். அதோடு திரைப்படத்தில் அவர் வரும் காட்சி ஒன்றுக்கு பேப்பரை கிழித்து, ஆரவாரம் செய்துள்ளனர் ரசிகர்கள். தற்போது அந்த வீடியோவை தான் பகிர்ந்துள்ளார் சோனு சூட்.

'எனது அன்பான ரசிகர்களை நான் எப்போதும் எனது குடும்பத்தினர் என சொல்வேன். என் மீது வைத்த அன்பின் காரணமாக இதை செய்தமைக்கு நன்றி. இந்த மாதிரியான அன்பை பெற நான் தகுதியானவன் இல்லை என கருதுகிறேன். உங்கள் அன்பு தான் என்னை சிறப்பாக பணி செய்ய வைக்கிறது. உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்' என தெரிவித்துள்ளார் சோனு சூட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE