மும்பை: திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவு செய்துள்ளது 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார் அந்த திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி.
கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம். கடந்த 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்று உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியிருந்தது இந்தத் திரைப்படம். இதுவரை சுமார் 339 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்துள்ளதாக தெரிகிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவு.
"இன்றுடன் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்கள் ஆகிறது. இந்த படம் இப்போதும் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. இது மனிதத்திற்கு கிடைத்த வெற்றி. இது நிஜமாகவே மக்களின் படம். அனைவருக்கும் நன்றி" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி.