'நிறைய காட்சிகள் யோசித்துள்ளோம்' - 'கேஜிஎஃப் 3-ம் பாகம்' குறித்து யஷ் பதில்

By செய்திப்பிரிவு

பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியானது 'கேஜிஎஃப் 2'. பான் இந்தியா படமான இதில், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

இதனிடையே படம் முடிந்த பிறகு ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியையும் படக்குழு வைத்திருந்தது. படம் முடிந்து வெளியே செல்ல முயலும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில், 'கேஜிஎஃப்' 3-ம் பாகம் வெளியாகும் என்பதை குறிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் எப்போது வெளியாகும், யார் யார் நடிப்பார்கள் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா, 'கேஜிஎஃப் 3-ம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது' என கன்னடா செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இப்போது நடிகர் யஷ் கேஜிஎஃப் 3-ம் பாகம் தொடர்பாக பேசியிருக்கிறார். அதில், "மூன்றாம் பாகம் தொடர்பாக நானும், பிரசாந் நீலும் நிறைய காட்சிகள் யோசித்துள்ளோம். இரண்டாம் அத்தியாயத்தில் எங்களால் செய்ய முடியாத விஷயங்கள் நிறைய உள்ளன. எனவே மூன்றாம் அத்தியாயத்துக்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். அது ஒரு ஐடியா. ஆனால் அப்போதே அதை விட்டுவிட்டோம்" என்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE