இந்த வாரம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் முன்னணி நாயகர்கள் நடித்த படங்கள் வெளியாக உள்ளன. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்து ஒரு விரைவு முன்னோட்டத்தைப் பார்ப்போம்.
நாளை (வியாழக்கிழமை) திரையரங்குகளில் மூன்று படங்கள் வெளியாகின்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த, 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் ரிலீஸாகிறது. அதேபோல, அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாஸ்டல்' திரைப்படமும், பிரித்விராஜ், மம்தா மோகன்தாஸ், சுராஜ் வெங்ஜரமுடு நடித்த மலையாள படமான 'ஜன கன மன' படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
நாளை மறுநாள் (ஏப்ரல் 29) சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள 'கதிர்' திரைப்படம் வெளியாகிறது. அதேபோல, ராம்சரண், சீரஞ்சிவி நடித்த, 'ஆச்சார்யா' தெலுங்கு படமும், அஜய் தேவ்கன், அமிதா பச்சன் நடித்த, 'ரன்வே 34' படமும் ரிலீசாகிறது. தவிர, டைகர் ஷெராஃப், நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள, 'ஹீரோபந்தி 2' திரைப்படமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஓடிடியை பொறுத்தவரை, மலையாளத்தில் வெளியான 'விக்ருதி' திரைப்படத்தின் ரீமேக்கான 'பயணிகள் கவனிக்கவும்' படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் வித்தார்த் நாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.