'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் 'சூரரைப் போற்று' தமிழில் வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது. கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதனை இயக்குநர் சுதா கொங்கராவே இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் இந்தி ரீமேக் ஷூட்டிங் நேற்று மும்பையில் தொடங்கியிருக்கிறது.
இந்தியில் இந்தப் படத்தை விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதில், அக்ஷய் குமார் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் படங்களை நாயகன் அக்ஷய் குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
» 'தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவாயா என நாசர் சார் கேட்டார்' - நடிகர் ஜீவா பேச்சு
முன்னதாக, பூஜையில் பங்கேற்பதற்காக சூர்யா நேற்று மும்பை சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா, 'உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் எப்போதும் தேவை' என்று கூறியுள்ளார். இதன் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார் சூர்யா. அவர் தற்போது பாலா இயக்கும் பெயரிடப்படாத படத்திலும், வெற்றி மாறனின் 'வாடிவாசல்' படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.