சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித்?

By செய்திப்பிரிவு

கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துள்ள இயக்குநர் சுதா கொங்கராவின் அடுத்தப் படத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

'இறுதிச் சுற்று' படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. சூர்யா நடிப்பில் அவர் இயக்கிய 'சூரரைப்போற்று' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கேப்டன் கோபிநாத் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியில் சுதா கொங்கரா ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை தழுவி புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை 'கேஜிஎஃப்' 'சலார்' படங்களை தயாரிக்கும் 'ஹோம்பலே பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ''சில உண்மைக் கதைகள் சரியான தருணத்தில் சொல்லப்பட வேண்டியவை. எங்களின் அடுத்தப் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் பெருமைக் கொள்கிறோம். எங்களது எல்லா படங்களைப் போன்று இந்தப் படத்தின் கதையும் இந்திய அளவில் ஈர்க்கும் என்று உறுதியாக நம்புகிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது இந்தக் கதையில் அஜித் நடிக்கவிருப்பதாக புதிய தகவல்கள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே அஜித் - சுதா இணையவிருப்பதாக பல வருடங்களாக செய்திகள் வந்ததன் தொடர்ச்சியாக இப்போதும் அது வட்டமடித்து வருகின்றன. ஆனால் சுதாவின் அடுத்தப் படம் சூரரைப் போற்று இந்தி ரீமேக். அக்சய் குமார் நடிக்க, நாளை முதல் அதன் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. அடுத்த வருடம் அது ரிலீஸாக உள்ளது. அதனை தொடர்ந்து வெப் சீரிஸ் ஒன்று, காதல் கதை ஒன்று, அதன்பிறகே உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு படம் என இயக்குநர் சுதா அடுத்த வருடங்களில் பிஸியாக உள்ளார்.

எனினும், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "தமிழில் எனது அடுத்தப்படம் சூர்யா உடன் இணைந்து தான். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். அதேநேரம் அது பயோபிக் படம் கிடையாது" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE