பெரிய நடிகர்கள் சினிமாவை வாழவைக்க மாட்டார்கள் - தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

By செய்திப்பிரிவு

பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க மாட்டர்கள் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

யோகேஸ்வரன் என்ற சிறுவன் பாடி, நடித்துள்ள 'ஹே சகோ ' இசை ஆல்பம் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள். ஜெய் க்ருஷ் கதிர். பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது, "நான் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து இருப்பது இவர்களை வாழ்த்துவதற்கும் பாராட்டுவதற்கும் தான். யோகேஸ்வரனை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால ஒருவரை வாழ்த்தும் போதும் தான் மனம் தூய்மை பெறுகிறது. திட்டுகிற போது நம் மனம் சிறுமை பெறுகிறது. திட்டினாலே ,திட்டுவதற்கு நினைத்தாலே இயற்கையாகவே மனம் சுருங்கி விடும். யோகேஸ்வரனை தம்பி நீ பாடியதும் ஆடியதும் அருமை பிரமாதம் என்று பாராட்டிப் பாருங்கள்.அது வாழ்த்துகிற நம்மையும் வாழ வைக்கும். அந்த நல்லெண்ண அலை இந்தக் குழந்தைக்கும் போய்ச் சேரும். இந்த யோகேஸ்வரன் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு அவன் மேடையில் தோன்றியதையும் பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதற்குப் பின்னே பெற்றோரை நினைத்துப் பெருமைப் பட்டேன். அவர்களை வாழ்த்துகிறேன்.

பெரிய தயாரிப்பாளர், பெரிய நடிகர்கள் படத்தை வாழ்த்துவதற்கு யார் வேண்டுமானாலும் வருவார்கள். ஆனால் சிறிய படங்களை வாழ்த்துவதற்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை. நாங்கள் தான் வருவோம். சிறிய தயாரிப்பாளர்களை வரவேற்பதற்கும் வாழ்த்துவதற்கும் நாங்கள் தான் வரவேண்டும். சிறிய தயாரிப்பாளர்கள் வாழ்ந்தால் அவர்கள் எடுத்த படம் வெற்றி பெற்றால் சினிமா வாழும்.

பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்களால் சினிமாவிற்கு ஒரு பயனும் கிடையாது.100 கோடி 200 கோடி வாங்கும் நடிகர்கள் சினிமாவை வாழ முடியாது.அவர்களால் சினிமாவே வளர்க்கவே முடியாது. சினிமா வாழ்வது சிறிய படத் தயாரிப்பாளர்களால்தான்.ஒரு சிறிய தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் நூறு தயாரிப்பாளர்கள் திரையுலகில் உள்ளே வருவார்கள். ஆயிரம் குடும்பங்கள் திரையுலகில் வாழும்.

அதனால்தான் நாங்கள் சிறிய தயாரிப்பாளர்கள் வரவேண்டும் வளர வேண்டும் என்று நினைக்கிறோம். இப்போதெல்லாம் நம் ஹீரோக்கள் தெலுங்கு திரையுலகை வாழவைக்கப் புறப்பட்டு விட்டார்கள். இங்கே உள்ள தயாரிப்பாளர்கள் எல்லோரும் பெரிதாக வளர்ந்து விட்டது போல் இவர்கள் தெலுங்குப் பக்கம் போகிறார்கள். இன்னும் சிலர் சாப்பாட்டுக்கே வழியில்லாத ஸ்ரீதேவியின் கணவர் குடும்பத்திற்குப் படங்கள் கொடுக்கிறார்கள். .ஆனால் நானும் பேரரசுவும் சின்ன படங்களையும் சின்ன தயாரிப்பாளர்களையும் வாழ்த்துகிறோம்.அதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

சின்ன தயாரிப்பாளர் முதலில் நன்றாக இருந்தால் இன்னொரு படம் தான் எடுப்பான்.ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்று நன்றாக இருந்தால் தொழிலாளிகள் நன்றாக இருப்பார்கள்; இயக்குநர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் நன்றாக இருப்பார்கள்; நடிகர்கள் மிக மிக நன்றாக இருப்பார்கள்.

அதிக சம்பளம் எதுவும் கிடையாது. ஒரு யுகத்தை காப்பாற்றும் அளவுக்கு இன்று ஹீரோக்கள் சம்பளம் வாங்குகிறார்கள்.அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு யாரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE