கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோக்கும் சுதா கொங்கரா - அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

உண்மைச் சம்பவத்தை தழுவிய புதிய படம் ஒன்றை இயக்குநர் சுதா கொங்காரா இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'இறுதிச் சுற்று' படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. சூர்யா நடிப்பில் அவர் இயக்கிய 'சூரரைப்போற்று' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கேப்டன் கோபிநாத் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியில் சுதா கொங்கரா ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை தழுவி புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை 'கேஜிஎஃப்' 'சலார்' படங்களை தயாரிக்கும் 'ஹோம்பலே பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதில், ''சில உண்மைக் கதைகள் சரியான தருணத்தில் சொல்லப்பட வேண்டியவை. எங்களின் அடுத்தப் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் பெருமைக் கொள்கிறோம். எங்களது எல்லா படங்களைப் போன்று இந்தப் படத்தின் கதையும் இந்திய அளவில் ஈர்க்கும் என்று உறுதியாக நம்புகிறோம்'' எனத் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE