அது என் ட்வீட் அல்ல - சூர்யா குறித்த பதிவால் திருப்பூர் சுப்பிரமணியம் அதிர்ச்சி

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் பெயரில், போலியாக ட்விட்டரில் கணக்கு தொடங்கி நடிகர் சூர்யா குறித்து அவதூறாக பதிவிடப்பட்டுள்ள சம்பவம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவராக இருப்பவர் திருப்பூரை சேர்ந்த சக்தி சுப்பிரமணியம். இவர் சொந்தமாக யுனிவர்சல் திரையரங்கில் திரையரங்கம் வைத்துள்ளார். திருப்பூர் சுப்பிரமணியம் என்ற பெயரில் ட்விட்டரில் இன்று மாலை வெளியான ஒரு பதிவில், ’நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தில், தயார் ஆகும் எந்த படத்தையும், இனி திரையிட மாட்டோம்’ என பதிவிடப்பட்டிருந்தது. இதனை பலரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். தொடர்ந்து அந்த பதிவிற்கு, வரவேற்பு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து பலரும் விசாரித்த போது, போலியாக ட்விட்டரில் திருப்பூர் சுப்பிரமணியம் என்ற கணக்கை தொடங்கி, நடிகர் சூர்யா குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.


இதுகுறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் கூறியதாவது: "எனக்கு ட்விட்டரில் கணக்கு கிடையாது. நான் அதனை பயன்படுத்துவதும் இல்லை. என் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மர்ம நபர்கள் இவ்வாறு பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்த பதிவு மூலம் அவதூறு ஏற்படுத்த நினைத்திருக்கலாம் என்கின்றனர் சமூகவலைதளவாசிகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE