ஜிகர்தண்டா 2: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் ராகவா லாரன்ஸ்?  

By செய்திப்பிரிவு

மகான் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா 2 படத்தை இயக்க உள்ளதாகவும், அதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் பான் இந்தியா நடிகர் ஒருவரும் இடம்பெறுவார் எனவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா'. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த துணை நடிகர் மற்றும் படத்தொகுப்பிற்காக இந்தப் படத்திற்கு இரு தேசிய விருதுகளும் கிடைத்தன. இதனிடையே அண்மையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடித்த 'மகான்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், மகான் படத்தைத் தொடர்ந்து ஜிகர்த்ண்டா 2ம் பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தில் சித்தார்த்துக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் முதல் பாகத்தில் அசால்ட் சேதுவாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹா இந்தப் படத்திலும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 'பான் இந்தியா' நடிகர் ஒருவரும் இந்தப் படத்தில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது. 'ஜிகர்தண்டா 2' படப்பிடிப்பு இந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகவும், படத்தை 2023 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE