’ஊ சொல்றியா’ பாடல் நடன இயக்குநர் மீது பாலியல் புகார்

By செய்திப்பிரிவு

மும்பை: பிரபல பாலிவுட் நடன இயக்குநரான கணேஷ் ஆச்சரியா மீது துணை நடன இயக்குநர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளது பாலிவுட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணேஷ் ஆச்சரியா பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடன இயக்குநர். பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர். சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தில் ’ஊ சொல்றியா...’ பாடலுக்கும் இவர் நடனம் அமைந்திருந்தார். இந்த நிலையில், கணேஷ் ஆச்சரியா தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக துணை நடன இயக்குநர் ஒருவர் மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பெண் அளித்த பேட்டி ஒன்றில், “கணேஷ் நான் இதனை போலீஸில் தெரிவிப்பதை அறிந்து, அவரது துணை நடன இயக்குநர்கள் மூலம் என்னை அடிக்கச் செய்தார். அவர்கள் என்னை தரக்குறைவாக பேசினார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மும்பை போலீஸார், கணேஷ் ஆச்சாரியா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

புகார் குறித்து கணேஷ் ஆச்சாரியா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

#MeToo விவகாரம் இந்தியா அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியபோதே கணேஷ் ஆச்சரியா மீது பல பாலியல் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE