'எனது நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதது' - அகாடமி பதவியில் இருந்து விலகிய வில் ஸ்மித்

By செய்திப்பிரிவு

ஆஸ்கர் அகாடமி அமைப்பின் பதவியில் இருந்து விலகியுள்ளார் அமெரிக்க நடிகர் வில் ஸ்மித்.

'Academy of Motion Picture Arts and Sciences' என்ற அகாடமி அமைப்பின் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை நேற்று வில் ஸ்மித் கொடுத்த நிலையில், தற்போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளது அகாடமி. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், " ஸ்மித்தின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதற்காக ஸ்மித்துக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக வரும் 18-ம் தேதி நடக்கும் வாரியக் கூட்டத்தில் முடிவெடுப்போம்" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, வில் ஸ்மித் தனது ராஜினாமா கடிதத்தில், "அகாடமியின் ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸுக்கு நான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். மேலும் எனது நடத்தை தொடர்பான அனைத்து விளைவுகளையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். விருது விழாவில் நான் வெளிப்படுத்திய நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதது. இந்த சம்பவத்தால் மனம் உடைந்து உள்ளேன். அகாடமி என்மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துளேன். எனவே, அகாடமி உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துகிறேன்" என்று கூறியிருந்தார்.

இதே கடிதத்தில் தன்னால் காயப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டு அந்தப் பட்டியலில் கிறிஸ் ராக் உடன் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகளாவிய ரசிகர்களையும் சேர்த்து அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார் வில் ஸ்மித்.

இந்த வாரம் திங்கள்கிழமை, 94-வது ஆஸ்கர் அகாடமி விருதுகளின்போது, தனது மனைவியை உருவக் கேலி செய்தததற்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்கை விழா மேடையில் வைத்தே கன்னத்தில் அறைந்திருந்தார் வில் ஸ்மித்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE