ஒரே இயக்குநர் உடன் அடுத்தடுத்து இரண்டு படம் - ஜெயம் ரவியை பாராட்டிய அஹ்மத்

By செய்திப்பிரிவு

ஜெயம் ரவி தனது அடுத்தப் படத்திலும் இயக்குநர் அஹ்மத் உடன் இணையவுள்ளார்.

தமிழ் இளம் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளன. ஒன்று மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்'. அக்டோபர் 30 ஆம் தேதி இதன் முதல் பாகம் வெளியாகவுள்ளது.

அதேநேரம், 'ஜன கன மன' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்' போன்ற படங்களை இயக்கிய அஹ்மத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி உடன் டாப்ஸி, ரஹ்மான், அர்ஜுன் எனப் பலர் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, ஜெயம் ரவியின் அடுத்தப் படத்தையும் இதே அஹ்மத் இயக்குவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அஹ்மதுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார் ஜெயம் ரவி.

இதற்கு பதில் கொடுத்த இயக்குநர் அஹ்மத், "பரஸ்பர நம்பிக்கை, அன்பு மற்றும் மரியாதையை வளர்க்கும் உண்மையான மனிதர்களை சந்திப்பது மிகவும் அரிது. அப்படியான அனைத்தும் கொண்ட ஜெயம் ரவிக்கு நன்றி. அடுத்தடுத்து இரண்டு படங்கள். நமது பயணம் தொடரும். நீங்களே பெஸ்ட் ரவி" என்று நன்றி தெரிவித்து அடுத்தப் படத்திலும் இந்தக் கூட்டணி இணைவதை உறுதிப்படுத்தினார்.

ஒரு இயக்குநருடன் தொடர்ந்து பணியாற்றும் பழக்கம் கொண்டவர் ஜெயம் ரவி. தன் அண்ணன் மோகன் ராஜா, மிருதன் பட இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன், ரோமியோ ஜூலியட் லக்ஸ்மன் என அந்தப் பட்டியல் நீளம். எனினும், தனது அண்ணனை தாண்டி ஒருபடம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனது அடுத்தப் படத்தை ஜெயம் ரவி அதே இயக்குநருக்கு கொடுத்துள்ளது இதுவே முதல் முறை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE