சென்னை: பல உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
'மிஸ்டர் லோக்கல்' படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், 'ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக 1 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு, 2013-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. படம் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் 2018-ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
ஆனால், 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும், அந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ்தான் இயக்க வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தினார். இதனால்தான் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தால் எனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி எனக்கு அழுத்தம் கொடுத்தார். 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்க வைத்து விட வேண்டாம் எனவும் சிவகார்த்திகேயன் கூறினார்.
3 ஆண்டுகளுக்கு பின்னர், உண்மைத் தகவல்களை மறைத்து, தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இந்த பதில் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.