'பிரச்சினை முடிந்தது, இப்போது இருவரும் சகோதரர்கள்' - வில் ஸ்மித், கிறிஸ் ராக் குறித்து பாடகர் தகவல்

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விழாவில் சர்ச்சை ஏற்பட காரணமாக இருந்த கிறிஸ் ராக்கும், வில் ஸ்மித்தும் சகோதரர்கள் ஆகிவிட்டனர் என்றுள்ளார் ஹாலிவுட் பாடகர் ஒருவர்.

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. விழாவினை தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக், பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து உருவக் கேலியாக பேசினார். முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியா என்ற நோய் தோற்றால் பிங்கெட் ஸ்மித் போராடி வருவதால், அவர் மொட்டையடித்திருந்தார். எனினும், ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டு கிறிஸ் ராக் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த நடிகர் வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடை ஏறி அவரை கன்னத்தில் அறைந்தார். ஒரு சில நிமிடங்களில் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. உலகம் முழுவதும் இது பேசுபொருளானது.

விழா முடிந்த பின், கிறிஸ் ராக்கிடமும், ஆஸ்கர் அகாடமியிடமும் மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித், "அன்பு உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்யவைக்கும்" என்றார். ஆனால், வில் ஸ்மித் மேடையில் நடந்துகொண்ட விதம் குறித்து சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, இந்த விவகாரம் முடிந்துவிட்டது என்று ராப் பாடகர் சீன் கோம்ப்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "இது இப்போது பிரச்சினையல்ல. அனைத்தும் முடிந்துவிட்டது. இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். நான் அதை உறுதிப்படுத்துகிறேன். இவை எல்லாம் ஒருவகை அன்பால் தான் நிகழ்ந்துள்ளது. இப்போது வில் ஸ்மித்தும் கிறிஸ் ராக்கும் சகோதரர்கள் ஆகிவிட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE