பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி - தொடங்கியது படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த மாதம் 10-ம் தேதி வெளியாகியது. இந்தப் படத்துக்கு பிறகு வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கலாம் என்று கூறப்பட்டது.

சில தினங்கள் முன் இதற்கான டெஸ்ட் ஷூட்டும் சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா பங்கேற்ற புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில், இயக்குநர் பாலா உடன் சூர்யா மீண்டும் இணைந்துள்ளார். சூர்யாவின் 41-வது படமாக இது உருவாக உள்ளது.

பாலா இயக்கவுள்ள படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், தெலுங்கு சினிமாவில் தற்போது ட்ரெண்டில் இருக்கும் கீர்த்தி ஷெட்டியும், மலையாள நடிகை மமிதா பைஜூவும் நடிக்கவுள்ளனர்.

இன்று பூஜையுடன் கன்னியாகுமரியில் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'நந்தா'. அதன்பிறகு பிதாமகனில் இணைந்த இந்த ஜோடி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

இந்தப் படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதில் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரம் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. மேலும், ஜோதிகாவும் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், அதிகாரபூர்வ அறிவிப்பில் ஜோதிகா குறித்து எந்தவித தகவலும் இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE