இந்தி திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தனுஷை வைத்து '3' படத்தை இயக்கினார். இதன்பின் கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த 'வை ராஜா வை' படத்தை இயக்கியவர், பின்பு ஒரு டாக்குமென்டரி படம் ஒன்றையும் இயக்கினார். இடையில் மாரியப்பன் தங்கவேலுவின் பயோபிக் படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். அதில் சிக்கல்கள் ஏற்பட அதனை கைவிட்டார். சில நாள்கள் முன் 'பயணி' இசை ஆல்பத்தை வெளியீடாக வெளியிட்டார்.
இப்போது தனது மூன்றாவது படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இம்முறை பாலிவுட்டில் அடியெடுத்தது வைக்கவுள்ளார். 'ஒ சாத்தி சல்' (Oh Saathi Chal) என்று அவர் இயக்கப்போகும் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஓர் உண்மை காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கவுள்ளது. அமிதாப்பச்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஜுண்ட்’ (‘Jhund) படத்தை தயாரித்த மீனு அரோராவை இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
ஐஸ்வர்யா படத்திலும் அமிதாப் நடிக்க வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதேநேரம் தயாரிப்பாளர் மீனு அரோரா படம் குறித்து பேசும்போது, "ஐஸ்வர்யா முதல் இந்திப் படத்தை இயக்கவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் பேசப்பட்ட உண்மைக் காதல் கதையை மையமாக கொண்டே படம் உருவாகவுள்ளது. ஆனால், படத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம். இதனால் அதிகம் பேச முடியாது. ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்த பின் படத்தின் நடிகர், நடிகைகள் அறிவிப்பு வெளியாகும்" என்று அறிவித்துள்ளார்.
» யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹீரோவாக ’குக் வித் கோமாளி’ புகழ்
» ஒவ்வோர் இந்தியரும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைப் பார்க்க வேண்டும்: ஆமீர் கான்
பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.