'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தொடர்ந்து, முதலில் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்தும், அடுத்து அல்லு அர்ஜூனை நாயகனாக வைத்தும் படங்களை இயக்க ராஜமெளலி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'மாவீரன்', 'நான் ஈ', 'பாகுபலி' உள்ளிட்ட படங்கள் மூலம் இந்திய வர்த்தக சினிமாவில் கவனம் ஈர்த்த ராஜமெளலியின் சமீபத்திய படைப்பு 'ஆர்ஆர்ஆர்'. ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ளது.
கரோனா பரவலுக்கு மத்தியில் படப்பிடிப்பு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது என பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு இப்படம் இம்மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையடுத்து, இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் டோலிவுட்டில் கசிந்துள்ளது. இது மகேஷ் பாபு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
» 'ஜாலியோ ஜிம்கானா' - விஜய் குரலில் 'பீஸ்ட்' 2-வது பாடல் அப்டேட்
» 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' - முழு வரிவிலக்கு கேட்கும் பாஜக அல்லாத முதல் முதல்வர்
மகேஷ் பாபு படத்துக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தையும் ராஜமௌலி இயக்கவிருப்பதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.
கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் அல்லு அர்ஜூனும், பிரமாண்ட இயக்குநரும் கூட்டணி வைப்பதும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
இந்த இரண்டு திட்டங்களும் முதற்கட்டத்திலேயே உள்ளதால், அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகிவில்லை. முதலில் மகேஷ் பாபு படம் தொடர்பான அறிவிப்பும், அதையடுத்து அல்லு அர்ஜூன் தொடர்பான அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது.