சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' படத்தின் படப்பிடிப்பில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இணைந்துள்ளார்.
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றி, பணிகள் தொடங்கப்பட்டன.
மோகன் ராஜா இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'காட்ஃபாதர்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் சிரஞ்சீவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை ராம்சரண் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருகிறார். கரோனா காரணமாகவும், வேதாளம் ரீமேக் படமான 'போலோ ஷங்கர்' படப்பிடிப்பின் காரணமாகவும் தாமதமான 'காட்ஃபாதர்' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
» விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் - நயன்தாரா?
» 'கடைசி வரை கற்பதுதான் சினிமாவின் சிறப்பு' - வெற்றிமாறனின் உதவி இயக்குநராக கருணாஸ்
இப்போது இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் சல்மான் நடித்து வருகிறார். மும்பை புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடந்து வரும் படப்பிடிப்பில் சல்மான் கலந்துகொண்டுள்ளார்.
சல்மானை வரவேற்று சிரஞ்சீவி பதிவிட்டுள்ள ட்வீட்டில், "காட்ஃபாதர் செட்டுக்கு வரவேற்கிறோம் சல்மான் பாய். உங்களின் வரவு எங்களை உற்சாகப்படுத்தியுள்ளதுடன், அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. உங்களுடன் திரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இந்தப் படத்தில் நீங்கள் இருப்பது ரசிகர்களுக்கு ஒரு மாயாஜாலத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
சிரஞ்சீவியும், சல்மான் கானும் நெருங்கிய நண்பர்கள். இந்த நட்பின் அடிப்படையில் சல்மான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.