'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படம் வெள்ளிக்கிழமை வெளியாகியது. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

காஷ்மீர் பண்டிட்களின் துயரத்தை கூறும் இப்படத்திற்கு வரி விலக்கு வேண்டி பாஜகவினரால் பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. இப்படத்துக்கு பாஜக ஆளும் ஹரியாணா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசும் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி இப்படத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். இது குறுத்து செவ்வாய்க்கிழமை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “ 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் நல்ல படம். நீங்கள் அனைவரும் அதைப் பார்க்க வேண்டும். இதுபோன்ற திரைப்படங்கள் அதிகம் வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பேச்சு சுதந்திரத்தின் கொடி ஏந்தியவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கடந்த 5-6 நாட்களாக கடும் கோபத்தில் உள்ளனர். உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் புகழ்வதற்குப் பதிலாக அவர்கள் இழிவுபடுத்துகிறார்கள்” என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார்.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு பாஜக உள்ளிட்டோரின் ஆதரவு ஒருபக்கமும், அந்தப் படம் ஏற்படுத்தம் தாக்கத்தை முன்வைத்து விமர்சனங்கள் மறுபக்கமும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE