பிரபாஸ் படத்தில் மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
'கே.ஜி.எஃப்' இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சலார்'. பிரபாஸ் நாயகனாக, ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்துவரும் இப்படத்தை 'கே.ஜி.எஃப்' படத்தைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. முதலில் இந்தவருடம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தே படக்குழு படப்பிடிப்பைத் தொடங்கியது. ஆனால் கரோனா சூழலால், பிரசாந்த் நீல்லின் 'கே.ஜி.எஃப் 2' ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது.
'சலார்' வெளியீட்டை அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ள படக்குழு, தற்போது அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விறுவிறுப்பாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, 'சலார்' படத்தில் மலையாள நடிகர் பிரித்திவிராஜ் வில்லன் வேடம் ஏற்றுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோஷனுக்காக கேரளா சென்றுள்ள பிரபாஸ் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரித்திவிராஜ் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளதை உறுதிப்படுத்தினார். "பிருத்விராஜ் சார் சலார் படத்தில் இணைந்துள்ளார். அவர் எங்களின் படத்தில் அங்கம் வகிக்க ஒப்புக்கொண்டது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று பிரபாஸ் கூறினார்.
» மங்காத்தா படத்தில் அஜித் உடன் அர்ஜுன் ரோலில் நடிக்க விரும்பிய விஜய் - வெங்கட்பிரபு பகிர்வு
» சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த புதிய கூட்டணி 'சலார்' எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, 'கே.ஜி.எஃப் 2' கேரள வெளியீட்டு உரிமையை பிரித்திவிராஜ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.