மங்காத்தா படத்தில் அஜித் உடன் அர்ஜுன் ரோலில் நடிக்க விரும்பிய விஜய் - வெங்கட்பிரபு பகிர்வு 

By செய்திப்பிரிவு

"மங்காத்தா படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நான் நடித்திருப்பேனே" என்று நடிகர் விஜய் கூறியதாக இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மங்காத்தா'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்தார். யுவன் இசையமைத்தார். அஜித் ரசிகர்கள் மத்தியில் 'மங்காத்தா' படத்துக்கு என்றும் தனி இடமுண்டு. அஜித் நடிப்பில் வெளியான 50-வது படம் ‘மங்காத்தா’ என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் பல்வேறு படங்கள் வெளியாகிவிட்டாலும், ‘மங்காத்தா’ அவரை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திய படம் என்று சொல்லலாம். தற்போது ‘மங்காத்தா’ படம் குறித்து புதிய தகவல் ஒன்றை, பேட்டியொன்றில் வெங்கட்பிரபு வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் வெங்கட்பிரபு கூறும்போது, “மங்காத்தா படம் வெளியானவுடன், எங்கள் குழுவினருக்கு வீட்டில் விருந்தளித்தார் விஜய் சார். அனைவருமே விஜய் - அஜித் இருவருமே போட்டியாளர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், அஜித்தின் 50-வது படம் வெற்றியானதற்கு விஜய் சார் எங்களுக்கு விருந்தளித்தார். “இப்படியொரு படம் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ, அர்ஜுன் சார் கதாபாத்திரத்துக்கு என்னைக் கூப்பிட்டு இருந்தால் கூட நான் நடித்திருப்பேன். அஜித்தின் 50-வது படம் அது, கண்டிப்பாக லேண்ட் மார்க் படமாக இருந்திருக்கும்” என்றார்.

அதற்கு, ”இப்போது சொல்கிறீர்களே” என்றேன். ”இல்லை... நீங்கள் கேட்டிருக்கலாம்” என்று விஜய் சார் சொன்னார்” என்று பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE