'கோரிக்கை ஏற்கப்பட்டது... விரைவில்!' - ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இளையராஜா பதில்

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் இசை மேதைகளான இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் துபாயில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு நேற்று இளையராஜா விசிட் அடித்துள்ளார். துபாய் கண்காட்சியில் சமீபத்தில் இளையராஜா இசைக் கச்சேரி நடத்திய நிலையில்தான் ரஹ்மானை அவரின் ஸ்டுடியோவுக்கே சென்று சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு, "எங்கள் ஃபிரதோஸ் ஸ்டுடியோவுக்கு மேஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் எங்கள் ஸ்டுடியோவுக்காக அவர் இசையமைப்பார் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

சில மணிநேரங்களில் ரஹ்மானின் இந்தப் பதிவை டேக் செய்து "ரஹ்மானின் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பு தொடங்கும்" என்று இளையராஜா பதில் கொடுத்துள்ளார்.

பதிலுக்கு ஃபிரதோஸ் ஸ்டுடியோ ட்விட்டர் பக்கத்தில், "எங்களால் காத்திருக்க முடியவில்லை. இந்த துபாய் கண்காட்சியிலேயே அது நடக்குமா?" என்று பதிவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE