‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்கள்.
‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகிலன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்துக்குப் பிறகு ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் பணிபுரிந்து வருகிறார். விரைவில் படபூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி. சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியில் உருவாகும் இதில் ஜெயம் ரவிக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவி - அஹ்மத் கூட்டணி இணைந்து ‘ஜனகனமண’ என்னும் படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது. ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.