லாரன்ஸ் படத்திலிருந்து விலகிய இயக்குநர்கள்

By செய்திப்பிரிவு

‘துர்கா’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து இயக்குநர்கள் அன்பறிவ் விலகியுள்ளனர்
.
பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து, இயக்கி வரும் ‘ருத்ரன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ். ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இதற்குப் பிறகு ‘அதிகாரம்’ மற்றும் ‘துர்கா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் லாரன்ஸ். இதில் ‘துர்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார். இந்தப் படத்தினை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவ் இயக்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இரட்டையர்களான அன்பு மற்றும் அறிவு இருவரும் அன்பறிவ் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘24’, ‘கைதி’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஸ்டன்ட் கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர். இவர்கள் இயக்கும் முதல் படமாக ‘துர்கா’ அமைந்தது.

தற்போது எதிர்பாராத திருப்பமாக ‘துர்கா’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து அன்பறிவ் விலகியுள்ளனர். தாங்கள் சண்டைக் காட்சிகள் இயக்குவதற்கு ஒப்புக்கொண்ட படங்கள் இருப்பதால், இதன் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தங்களுடைய ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளனர்.

‘துர்கா’ திரைப்படம் படப்பிடிப்பு உரிய நேரத்தில் தொடங்கப்படாததே இதற்குக் காரணம் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE