'கடைசி விவசாயி' படக்குழுவுடன் 50 விவசாயிகளை சிறப்பிக்கும் திரையிடல் நிகழ்வு

By செய்திப்பிரிவு

'கடைசி விவசாயி' படக்குழுவை சிறப்பிக்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று அந்தப் படத்தை நாளை சிறப்பு திரையிடல் செய்யவுள்ளது.

'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'கடைசி விவசாயி'. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இப்படம் கடந்த பிப்.12 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விவசாயி ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தின் படக்குழுவை தனியார் நிறுவனம் சிறப்பிக்க உள்ளது. myHarvest Farms என்ற இயற்கை விவசாய நிறுவனம் படக்குழுவுடன் 50 விவசாயிகளை சிறப்பிக்க இருப்பதுடன், படத்தை சிறப்பு திரையிடல் செய்யவும் உள்ளது.

இதுதொடர்பாக அந்தநிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமீபத்தில் வெளியான “கடைசி விவசாயி” படத்தின் இயக்குநர் மணிகண்டன், இப்படத்தில் விவசாயம் செய்பவர்களோ தெரிந்தவர்களோ மிக அரிது என்பதையும் விவசாயத்துடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு நகரமயமாதலை நோக்கி செல்வதை உணர்த்தியுள்ளார். மேலும், தற்போது இருக்கும் சூழ்நிலையில் நாம் விவசாயிகளுக்கு தோள் கொடுக்காவிட்டால் வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை இப்படம் உணர்த்துகிறது.

விவசாயம் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் “myHarvest Farms” நிறுவனம், விவசாயத்தை மீட்டெடுக்கும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. எங்களின் எண்ணங்களையும் நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக “கடைசி விவசாயி” படத்தை சிறப்பு திரையிடல் செய்து, 50 விவசாயிகள் மற்றும் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரை சிறப்பிக்க உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

படத்தில் நடித்த ரெய்ச்சல் ரெபேக்கா உடன் நடிகர் ஆரி, நடிகர் ராஜ்மோகன், பாடகர் ஹரிஹரன், நடிகர் வருண், பாடகர் நரேஷ் ஐயர், நடிகை VJ ரம்யா, இசையமைப்பாளர் தரண் குமார், பாடகி மாளவிகா சுந்தர் மற்றும் நடிகர் மனோஜ் பாரதிராஜா ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE