திரைத்துறையில் நாயகியாக 12 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதற்கு சமந்தா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இன்றுடன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிறது.
இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு ‘Ye Maaya Chesave’ என்ற பெயரில் வெளியானது. இதில் நாக சைதன்யா மற்றும் சமந்தா நடித்திருந்தனர். இதன் மூலம் சமந்தா நாயகியாக அறிமுகமானார்.
இன்றுடன் திரைத்துறைக்கு சமந்தா நாயகியாக அறிமுகமாகி 12 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இது தொடர்பான மகிழ்ச்சியைத் தனது ட்விட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், “இன்றுடன் நான் திரைத்துறைக்கு வந்து 12 வருடங்கள் நிறைவடைகிறது. 'லைட்ஸ் கேமரா ஆக்ஷன்' என்ற வார்த்தைகளைச் சுற்றியும், ஒப்பற்ற தருணங்களைச் சுற்றியுமே இந்த 12 வருட நினைவுகள் அமைந்துள்ளன. ஆசிர்வதிக்கப்பட்ட இந்தப் பயணத்தில் இருப்பதிலும், உலகில் மிகச் சிறந்த, விஸ்வாசமான ரசிகர்களைப் பெற்றதாலும் நன்றியுணர்வு நிறைந்து நிற்கிறேன்” என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார்.