‘புஷ்பா’ சுகுமார் இயக்கத்தில் சிரஞ்சீவி?

By செய்திப்பிரிவு

விரைவில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம் ஒன்றை சுகுமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர்.

சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது. கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தைத் தொடர்ந்து விரைவில் ‘புஷ்பா 2’ படத்துக்கான பணிகளை சுகுமார் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் பான்-இந்தியா படம் ஒன்றை சுகுமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே பாலிவுட் படங்களை இயக்க சுகுமாருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும், எனினும் அது குறித்து அவர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படம் தவிர்த்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் ஒன்றையும் சுகுமார் இயக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE