‘பருத்திவீரன்’ வெளியாகி 15 ஆண்டுகள் | அனைத்துப் புகழும் அமீர் சாருக்கே - கார்த்தி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

‘பருத்திவீரன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கார்த்தி தனது சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘பருத்திவீரன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அமீர் இயக்கத்தில் கார்த்தியின் முதல் படமான இது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் வெளியான பல கிராமத்து படங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது. முதல் படத்திலேயே பெரும் புகழை தேடித் தந்தது இப்படம்.

இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பலரும் கார்த்திக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியுள்ளதாவது:

'பருத்திவீரன்’ படத்துடன் என்னுடைய திரைவாழ்க்கை தொடங்கியதில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டது. அனைத்துப் புகழும் அமீர் சாரையே சேரும். நான் கற்றுக் கொண்ட பல்வேறு படங்களில், வேலையை ஈடுபாட்டோடு ரசித்துச் செய்ய வேண்டும் என்று அவர் கற்றுக் கொடுத்த முறையை இன்றும் பின்பற்றி வருகிறேன். இந்த அழகான பாதையை வகுத்துக் கொடுத்த அமீர் சார், ஞானவேல், அண்ணா மற்றும் என்னுடைய அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE