பழம்பெரும் நடிகை KPAC லலிதா மறைந்தார்

By செய்திப்பிரிவு

பழம்பெரும் நடிகை KPAC லலிதா காலமானார். அவருக்கு வயது 74.

நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கியவர் லலிதா. மலையாளத்தில் குணச்சித்திர பாத்திரங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திய லலிதா தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அலைபாயுதே’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் லலிதா உள்ளார். இதுவரை 550-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மலையாள இயக்குநர் பரதனின் மனைவி ஆவார். 1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் நான்கு முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.

காயங்குளத்தில் இருந்த KPAC என்ற ஒரு பிரபல நாடக சபாவில் தொடர்ந்து பணியாற்றி வந்ததால் அவர் KPAC லலிதா என்று அழைக்கப்படுகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட லலிதா தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு உடல்நிலை சற்று சரியானதும் கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.22) இரவு லலிதா காலமானார்.

லலிதாவின் இறுதிச் சடங்குகள் வடக்கன்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற உள்ளது. லலிதாவின் மறைவுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE