'த்ரிஷ்யம் 2' இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

'த்ரிஷ்யம் 2' இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்கியுள்ளன.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக்கான இந்தப் படத்தில் கெளதமி நாயகியாக நடித்திருந்தார். ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'த்ரிஷ்யம் 2' கடந்த ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அவற்றிலும் வரவேற்பை பெற்றது. தமிழில் இப்படம் எப்போது ரீமேக்காகும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், இப்போதுவரை அதுபற்றிய எந்தவொரு அதிகாரபூர்வ தகவலயையும் படக்குழு வெளியிடவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் இன்று (பிப்.17) தொடங்கி நடைபெற்று வருகின்றன. அபிஷேக் பதாக் இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை அஜய் தேவ்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘த்ரிஷ்யம்’ முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை இயக்கிய நிஷிகாந்த் காமத் கடந்த 2020ஆம் ஆண்டு மரணமடைந்ததால் இப்படத்தை இயக்க அபிஷேக் பதாக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE