பீப் பாடல் விவகாரம்: நடிகர் சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் நடிகர் சிம்பு பாடிய ’பீப் சாங்’ இணையத்தில் வெளியானது. அந்தப் பாடல், பெண்களை ஆபாசமாக அணுகியதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பாடல் படிய சிம்பு மற்றும் இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. பின்னர் சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், தனக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி நடிகர் சிம்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஸிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் கோவை ரேஸ் கோர்ஸில் பதிவு செய்யபட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், நடிகர் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE