அமிதாப்பச்சன் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மீண்டும் தொடங்கப்படும் ‘உயர்ந்த மனிதன்’?

By செய்திப்பிரிவு

அமிதாப்பச்சன் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தொடங்கப்பட்ட ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

2018-ம் ஆண்டு ‘கள்வனின் காதலி’ இயக்குநர் தமிழ்வாணன் இயக்கத்தில் அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘உயர்ந்த மனிதன்’. இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே நிறுத்தப்பட்டது.

அமிதாப்பச்சனுக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட மோதலால் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்குப் பிறகு ‘உயர்ந்த மனிதன்’ படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கருதப்பட்டது.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் தயாரிப்பு உரிமையை மற்றுமொரு நிறுவனத்துக்கு வழங்கிவிட்டார்கள். இது தொடர்பான அறிவிப்பு பாலிவுட் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. ‘உயர்ந்த மனிதன்’ படத்தினை மீண்டும் தொடங்குவதற்கு புதிய தயாரிப்பாளர்கள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர்.

இந்த தயாரிப்பாளருக்கும் தனக்கும் எந்தவொரு பிரச்சினையுமில்லை என்பதால் அமிதாப்பச்சனும் ‘உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்புக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இன்னும் அமிதாப்பச்சனுக்கு 15 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE