ரசிகர்களை ஈர்க்கணுமா? - 'பரம சுந்தரி'யை முன்வைத்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு தியேட்டர் குழுமம் யோசனை

By செய்திப்பிரிவு

"ஒரு படம் வெற்றியடைய வேண்டுமென்றால், படத்தின் இசையமைப்பாளர்களிடமிருந்து ஒரு நல்ல பாடலை கேட்டு வாங்குங்கள்" என்று தயாரிப்பாளர்களுக்கு ராம் சினிமாஸ் நிறுவனம் யோசனை கூறியுள்ளது.

இது குறித்து ராம் சினிமாஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'ஒரு திரைப்படத்தை நோக்கி பார்வையாளர்களை இழுக்க வேண்டுமென்றால் முதலில் படத்தின் இசையமைப்பாளர்களிடமிருந்து ஒரு நல்ல பாடலை கேட்டு வாங்குங்கள். 90% சதவீத கமர்ஷியல் படங்கள் ஹிட் ஆவது பாடல்களால் மட்டுமே. பாடலின் மூலமாகத்தான் பெரும்பான்மை பார்வையாளர்களுக்கு அப்படம் சென்றடையும்.

‘மிமி’ என்றொரு இந்திப் படம். உங்களில் சிலர் அப்படத்தை பார்த்திருப்பீர்கள். அப்படத்தில் இடம்பெற்ற ‘பரம சுந்தரி’ பாடலுக்காகத்தான் உங்களில் பலர் அப்படத்தை பார்த்திருப்பீர்கள். நமக்கு அப்படத்தின் ட்ரெய்லர் பற்றி தெரியாது, நடிகர் - நடிகையர் பற்றி தெரியாது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அந்த அருமையான பாடல் பற்றி தெரியும்.

நாம் படத்தைப் பார்க்க ஆரம்பித்தவுடன், அந்தப் பாடலுக்காக நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று இயக்குனநக்குத் தெரியும், படம் தொடங்கிய சில நிமிடங்களிலே அப்பாடல் வந்தது.

இன்னும் ஒரு உதாரணத்தை நம் தமிழ் சினிமாவில் இருந்து சொல்லலாம். தாணு 'கபாலி' மற்றும் 'கர்ணன்' ஆகிய படங்களை தயாரித்தார். இரண்டிலும் பொதுவான விஷயம் என்ன? இரண்டு கதைகள் வணிக ரீதியானவை அல்ல. ஆனால், பார்வையாளர்களை எப்படி படத்தை நோக்கி இழுப்பது? 'கபாலி' படத்தின் ‘நெருப்புடா’ பாடல், ரஜினியின் என்ட்ரிக்கு பயன்படுத்தப்பட்டது மற்றும் ’கர்ணன்’ படத்தில் ‘கண்ட வரச் சொல்லுங்க’ பாடலும் படத்தின் தொடக்கத்திலேயே வந்தது.

அந்த இரண்டு பாடலுகளுக்காகவும்தான் ரசிகர்கள் வந்தார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதைப் அப்படத்தின் இயக்குநர்கள் படத்தின் ஆரம்பத்திலேயே கொடுத்து விட்டார்கள். மீதிப் படம் அவர்களுக்கு பிடித்ததோ இல்லையோ படத்தின் தொடக்கத்தை அனைவரும் நிச்சயமாக ரசித்தார்கள்.

நாம் இதை ட்விட்டரில் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறோம், அன்புள்ள தயாரிப்பாளர்களே, பாடல்கள்தான் கமர்ஷியல் திரைப்படங்களுக்கு முக்கியம். உங்கள் கடின உழைப்பை வீணாக்காதீர்கள், ஒரு திரைப்படத்தை தயாரிப்பது எளிதானது அல்ல. அதற்கு பெரிய முயற்சி மற்றும் நிறைய உழைப்பு தேவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஓர் அன்பான வேண்டுகோள், தயவு செய்து பாடல்களில் கவனம் செலுத்துங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE