'டான்' வெளியாவதில் புதிய சிக்கல்

By செய்திப்பிரிவு

'டான்' படம் வெளியாவதில் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. இதில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். இதில் கவுரவக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனனும் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் கரோனா பரவல், திரையரங்குளில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது பிப்ரவரி வெளியீட்டிலிருந்து தள்ளிவைக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இன்னொருபுறம் கரோனா அச்சுறுத்தலால் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளிவைக்கப்பட்ட 'ஆர்ஆர்ஆர்' படமும் மார்ச் 25ஆம் தேதி வெளியாகவுள்தாக அப்படக்குழு நேற்று அறிவித்தது.

டான் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். அதே போல 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் லைகா நிறுவனமே கைப்பற்றியுள்ளது.

ஆகையால் ஒரே தேதியில் ஒரு நிறுவனத்தின் இரண்டு படங்கள் வெளியானால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் டான் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE