ராஜமெளலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் வரும் மார்ச் 25ஆம் தேதி திரைங்குகளில் வெளியாகவுள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்ஆர்ஆர்) பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக உலகெங்கும் வெளியாகவிருந்தது. 'பாகுபலி'க்குப் பிறகான ராஜமெளலியின் பிரமாண்ட படைப்பு என்பதாலும், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் எனப் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்பார்ப்புக்குரிய படமாக 'ஆர்ஆர்ஆர்' கவனம் ஈர்த்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாகவிருந்த நிலையில், புரமோஷன் பணிகளுக்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. ஆனால், கரோனா அச்சம் காரணமாக படத்தின் வெளியீடு திடீரென தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 அன்று வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், 'ஆர்ஆர்ஆர்' படம் வரும் மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு இறுதி செய்துள்ளது.
» மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பாரதிராஜா
» நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் உணர்வுகள் உள்ளன: 'ஷ்யாம் சிங்கா ராய்' கீர்த்தி ஷெட்டி
#RRRonMarch25th, 2022... FINALISED!