ரூ.100 கோடி வசூல் - இந்தி டப்பிங்கிலும் சாதனை படைத்த ‘புஷ்பா’ 

By செய்திப்பிரிவு

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் இந்தியிலும் குறிப்பிடத்தக்க வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது.

ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது. கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்நிலையில் ‘புஷ்பா’ படம் இந்தியிலும் குறிப்பிடத்தக்க வசூல் சாதனையை படைத்துள்ளது. இதுவரை இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட தென்னிந்திய படங்களில் ‘பாகுபலி 1 & 2’, ‘சாஹோ’ மற்றும் 2.0 ஆகிய படங்களே ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளன. தற்போது அந்தப் பட்டியலில் ‘புஷ்பாவும்’ இணைந்துள்ளது. குறிப்பாக டெல்லி, ஹர்யாணா உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் இந்த வாரம் மட்டுமே ‘புஷ்பா’ படம் கூடுதலாக ரூ.2 கோடி வசூலித்து 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக சினிமா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE