இயக்குநர் பாரதிராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
பாரதிராஜா மற்றும் வைகோ இருவரும் விரைவில் குணமடைய விரும்புவதாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“காலத்தின் நாயகர்களே
விரைந்து வருக
இருவரோடும்
பழகுவதற்கு பாக்கியம்
பெற்றவனின் அழைப்பு இது.
நீங்கள் தந்த
ஊக்கமதை
ஒருக்காலும் மறவேன்.
'கலிங்கப்பட்டியின் சிங்கம்'
தலைவர் வைகோ அவர்களும்
என் 'தென்கிழக்குச்சீமை'
இயக்குனர் பாரதிராஜா அவர்களும்
தொற்று நீங்கி நலமாக
விரும்புகிறேன்”
இவ்வாறு சீனு ராமசாமி கூறியுள்ளார்.
இதே போல கவிஞர் வைரமுத்துவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாரதிராஜா மற்றும் வைகோ இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.