திருமணத்தால் சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லு என்பவருடன் காஜல் அகர்வாலுக்குத் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார். தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி வந்தாலும் இது குறித்து காஜல் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
» திரையுலகில் நுழைந்து 10 ஆண்டுகள்- டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி
» மார்ச் 25-ல் சிவகார்த்திகேயனின் ’டான்’ தியேட்டரில் வெளியாக வாய்ப்பு
திருமணம் ஆனபிறகு, நடிகைகள் சினிமாவுக்கு குட்பை சொல்லும் காலம் தற்போது மாறிவிட்டது. பாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள சினிமாத் துறைகள் மாறிவிட்டன. நடிகர்கள் எடுக்கும் சொந்த முடிவுகள் அவர்களது சினிமா வாழ்க்கையில் பிரதிபலிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு மக்கள் முதிர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி. வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் நாம் தொடர்ந்து நம் வேலையை செய்யலாம்.
திருமணத்துக்கு முன்பிருந்தே நான் எனக்கான கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். சமீபகாலமான எனக்கான கதாபாத்திரங்களையும் நான் கவனமாக தேர்வு செய்து வருகிறேன். திருமணம் அதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இவ்வாறு காஜல் கூறியுள்ளார்.