திரையுலகில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு டொவினோ தாமஸ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு வெளியான ‘பிரபுவின்டே மக்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் டொவினோ தாமஸ். அப்படத்தை தொடர்ந்து ‘ஏபிசிடி’, ‘7த் டே’, ‘மாயநதி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடித்த படம் ‘மின்னல் முரளி’படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்திய பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றுடன் (ஜன 28) டொவினோ தாமஸ் திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு டொவினோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
10 ஆண்டுகளுக்கு முன்பு, சரியாக இதே நாள், முதன்முறையாக நான் சினிமா கேமரா முன் நின்றேன். 10 ஆண்டுகளில், ஏராளமான திரைப்படங்களும், கதாபாத்திரங்களும் கடந்து போய்விட்டன. இன்று என் வாழ்க்கை மாறிவிட்டது. சினிமா மாறிவிட்டது, பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், சினிமா மீதான என் ஆர்வமும் காதலும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன. வளர்ச்சிக்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது என்பதை நான் அறிவேன். அதைச் சிறப்பாகச் செய்ய எப்போதும் இடம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பாக செய்வதற்கு என்ன தேவையோ அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் நான் அறிவேன். எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த, பெரியவர் அல்லது சிறியவர் எனப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நபருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு டொவினோ கூறியுள்ளார்.